• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வருவாய்த்துறை அலுவலர் வேலை நிறுத்த போராட்டம்…,

Byரீகன்

Sep 3, 2025

திருச்சியில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தொடர் 48 மணி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தி 14 ஆயிரம் வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்கும் 48 மணி நேரத்தில் தொடர் வேலை நிறுத்த போராட்டம் திருச்சியில் துவங்கியது

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடன் நிரப்பிட அரசாணை வெளியிட வேண்டும். மேலும் மூன்றாண்டுக்கு உட்பட்ட 564 அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடன் நிரப்பிட வேண்டும்.

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் குறுகிய கால அவகாசத்தில் அதிகமான முகாம்கள் நடத்துவதை குறைத்து, வாரத்திற்கு இரண்டு முகாம்கள் மட்டுமே நடத்திடவும், மேலும் இத்திட்டப்பணிகளை மேற்கொள்ள உரிய கால அவகாசம், கூடுதலான தன்னார்வலர்கள், நிதி ஒதுக்கீடு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை வழங்கிட வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மைப் பணிக்கென சிறப்பு பணியிடங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மைப் பிரிவில் 31.03.2023 முதல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்கிட வேண்டும்.

சான்றிதழ் வழங்கும் பணிகள் மற்றும் “உங்களுடன் ஸ்டாலின் உள்ளிட்ட அரசு சிறப்புத் திட்டப் பணிகளை மேற்கொள்ள அனைத்து வட்டங்களிலும், புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் & தனி ஊதியம் வழங்கிட வேண்டும்.

அரசுத்துறைகளில் கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5% ஆக குறைக்கப்பட்டுள்ளதை இரத்து செய்து, மீண்டும் 25% ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும்.

இளநிலை உதவியாளர் / தட்டச்சர் ஆகியோருக்கிடையே ஒருங்கிணைந்த முதுநிலை நிர்ணயம் செய்வதில் ஏற்படுத்தப்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்திட மனிதவள மேலாண்மைத்துறை மூலமாக உரிய அரசாணையை உடன் வெளியிட வேண்டும்.

என்ற 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் பிரகாஷ் தலைமையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு உலகமணி, சங்கரநாராயணன், கார்த்திகேயன், சண்முகவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பொன் மாடசாமி கோரிக்கை விளக்க உரை வழங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பால்பாண்டி வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட பொருளாளர் ராமலட்சுமி நன்றி தெரிவித்தார். இந்தப் போராட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் வருவாய்த்துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.