விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள விஜயகரிசல் குளத்தில் பண்டைய கால மக்களின் நாகரீகத்தை தெரிந்து கொள்வதற்காக அகழாய்வு பணிக்காக 25 ஏக்கர் அளவீடு செய்யப்பட்டது.

இதில் மூன்று கட்டங்களாக அகழாய்வு பணிகள் முடிவடைந்துள்ளன. மூன்றாம் கட்ட அகழாய்வில் மட்டும் சூது பவள மணி ,மோதிரக்கல், சுடுமண் முத்திரைகள், தூத்துக்குடி துறைமுகத்தில் கிடைக்கும் வலம்புரி சங்கு மற்றும் வெண் சங்கில் செய்யப்பட்ட சங்கு வளையல்கள் அதிகமாக கிடைத்துள்ளன அதன் மூலம் சங்கு வளையல்கள் உற்பத்தி செய்யப்பட்ட தொழிற்சாலை இருந்ததற்கான சான்று கிடைத்துள்ளது. ஏராளமான கண்ணாடி மணிகள், சுடு மண்ணால் செய்யப்பட்ட ஆபரணங்கள், வெளிநாட்டு வணிகத்தில் பயன்படுத்தப்பட்ட 19 செப்புக்காசுகள், ஒரு தங்க காசு, வட்ட சில்லுகள் உள்பட5003 பொருட்கள் கிடைத்துள்ளன.

தமிழ்நாட்டில் நடைபெற்ற அகழாய்வில் அதிக பொருட்கள் கிடைத்த இடம் விஜய கரிசல்குளம் ஆகும். தற்போது மூன்றாம் கட்ட அகழாய்விற்கு பிறகு நான்காம் கட்டமாக தொடங்குவதற்கான பணிகள் ஏதும் தொடங்கப்படாமல் உள்ளது. அடுத்த அடுத்த கட்டங்களாக அகழாய்வு பணிகள் விரைவு படுத்தப்பட்டால் இன்னும் ஏராளமான பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆகையால் நான்காம் கட்ட அகழாய்வு பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






