• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு..,

பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணைக்கு நீர்வரத்து தொடங்கி, அணையின் நீர்மட்டமும் 130 அடியை தாண்டிய நிலையில், தேனி மாவட்டத்தில் முதல்போக சாகுபடிக்கு தேனி மாவட்ட கலெக்டர் பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தனர்.

தேனி மாவட்டம் லோயர்கேம்பில் தொடங்கி பழனிசெட்டிப்பட்டி வரை, கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளையம் வட்டத்தில் 11 ஆயிரத்து 807 ஏக்கர், போடி வட்டத்தில் 488 ஏக்கர், தேனிவட்டத்தில் 2 ஆயிரத்து 412 ஏக்கர் என தேனிமாவட்டத்தில் 14 ஆயிரத்தி 707 ஏக்கர் நிலப்பரப்பில் முல்லைப்பெரியாறு அணையின் பாசனத்தின் மூலம் இருபோக நெல்விவசாயம் நடைபெற்று வருகிறது. முல்லை பெரியாற்று நீரை நம்பியிருக்கும் இவ்விளை நிலங்களுக்கு, ஆண்டு தோறும் முதல் போக சாகுபடி நாற்று நடவுக்காக ஜூன் முதல் வாரம் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் முதல்போகத்திற்கு ஜூன்மாதம் திறக்கவேண்டிய தண்ணீர் தாமதமாகவே திறக்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பின்பு 2021&ல் அணை நீர்மட்டம் 130.90 அடியாக இருந்தபோது ஜுன் 1ஆம் தேதியும், 2022&ல் அணை நீர்மட்டம் 132.75 அடியாக இருந்தபோது ஜுன் 1ஆம் தேதியும், 2023 -ல் அணை நீர்மட்டம் 118.40 அடியாக இருந்தபோது ஜுன் 1ஆம் தேதியும், கடந்த ஆண்டு அணை நீர்மட்டம் 119.60 அடியாக இருந்தபோது ஜுன் 1ஆம் தேதியும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பெரியாறு அணையிலிருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணைக்கு நீர்வரத்து தொடங்கி, அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வந்த நிலையில், தேனி மாவட்டத்தின் முதல் போக பாசனத்திற்கு நாற்று நடவுக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர்.

இதை அடுத்து, தேனி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்போக சாகுபடிக்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார் . இதை தொடர்ந்து, இன்று காலை பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.45 அடியாக இருந்த நிலையில் அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி, தேக்கடியில் தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே உள்ள சுரங்க வாய்க்கால் ஷட்டர் பகுதியில் நடைபெற்றது.

தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் தமிழக அரசின் ஆணைக்கினங்க இன்று முதல் தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல்போக சாகுபடிக்கு 14707 ஏக்கர் நிலங்களுக்கு 200கனஅடியும், தேனிமாவட்ட குடிநீர் தேவைக்கு 100 கனஅடியும், ஆகமொத்தம் பெரியாறு அணையிலிருந்து விநாடிக்கு 300 கன அடிவீதம்
தண்ணீரை ஷட்டரை இயக்கி வைத்து திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பெரியாறு அணை சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் செல்வம், பெரியாறு வைகை வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் மயில்வாகனன், உதவி செய்ய பொறியாளர் குமார், விவசாய சங்கத்தினர் ஓ.ஆர் நாராயணன், வி.எஸ்.கே ராமகிருஷ்ணன், மற்றும் விவசாயிகள் அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து விவசாயிகள் தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீரில் மலர் தூவினர்.