விருதுநகர் மாவட்டம் சிவகாசி முஸ்லிம் ஓடை தெருவில் வசிக்கும் பாதுஷா- ரம்ஜான்பிவி தம்பதியினர். பாதுஷா கட்டிட தொழிலாளியாகவும், அவரது மனைவி ரம்ஜான்பிவி சூப்பர் மார்க்கெட்டிலும் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களது ஒரே மகன் முகமது ஆசிப்( வயது 12 ). முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில்6-ம் வகுப்பு படித்துவிட்டு 7-ம் வகுப்பு செல்லவுள்ள நிலையில், கோடை விடுமுறை என்பதால் தாய்- தந்தை இருவரும் வேலைக்கு சென்றிருக்கும் சமயத்தில் முகமது ஆசிப் வீட்டில் சேட்டை செய்து வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக ரம்ஜான்பிவியின் சகோதரியான தனது சித்தியுடன் முகமது ஆசிப் அவர் பணி புரியும் பராசக்தி காலனி சிறுகுளம் கண்மாய்கரை சாலையிலுள்ள தனியார் அச்சகத்திற்கு உடன் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
அப்போது அச்சகத்தில் இயங்கிக் கொண்டிருந்த திறந்த வெளி லிப்டில் முகமது ஆசிப் ஏறி இறங்கி விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது லிப்டிலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த பள்ளி மாணவன் முகமது ஆசிப்பை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, முதலுதவி சிகிச்சையளித்த நிலையிலும் வரும் வழியிலேயே முகமது ஆசிப் இறந்து விட்டதாக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.