• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு..,

சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் திரு ஜெயசீலன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் திரு ஜெயசீலன் அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.

அதன்படி, சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், சத்திரப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.30 இலட்சம் மதிப்பில் நாற்றாங்கால் பண்ணைகள் அமைப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், சின்ன ஓடைபட்டி ஊராட்சியில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.10 இலட்சம் மானியத்தில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்து, இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளியிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து, சின்னஓடைபட்டி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.25 இலட்சம் மதிப்பில் புதிய சமுதாயக்குளம் அமைக்கப்பட்டு, குளம் தூர்வாரப்பட்டு வரும் பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், பெத்துரெட்டிபட்டி ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8.75 இலட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை புதிதாக கட்டப்பட்டு வருதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் திரு ஜெயசீலன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, அரசின் மூலம் அந்தந்த ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு  திட்ட பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா என பொதுமக்கள் மற்றும் பயனாளிகளிடம் கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் திரு ஜெயசீலன் அவர்கள் கேட்டறிந்தார்.

மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.