• Sun. Feb 1st, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

பல்லாவரம் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்..,

ByR.Arunprasanth

May 20, 2025

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையோரம் தாய் மூகாம்பிகை நகர், காயிதே மில்லத் நகர், சாந்தி நகர், எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.

இப்பகுதிகள் அனைத்தும் அடையாறு ஆற்றின் கரையோரம் நீர் படிப்புப் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்கள் என்றும், அவற்றில் ஏராளமான வீடுகளை கட்டி பொதுமக்கள் குடியிருந்து வருவதாகக் கூறி, அதில் வசித்து வந்த 81 குடும்பத்தினரை, ஏற்கனவே வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றி,அவர்களுக்கு சென்னை பெரும்பாக்கம், கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் மற்றும் கிஷ்கிந்தா செல்லும் சாலை ஆகிய இடங்களில் தமிழக வீட்டு வசதி வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் கொடுத்து, அதில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், எஞ்சியுள்ள ஆக்கிரமிப்பு நிலத்தையும் மீட்பதற்காக கடந்த 12- ஆம் தேதி வருவாய் துறை அதிகாரிகள் தயாராகினர். இது குறித்த தகவல் அறிந்ததும் அப்பகுதி பொது மக்கள் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென ஒன்று கூடி, கையில் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தற்காலிகமாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அதிகாரிகள் சென்றனர்.

இந்த நிலையில் மீண்டும் இன்று வருவாய்த் துறை அதிகாரிகள், அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையோரம் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்களை அகற்றி வருகின்றனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மக்களில் பலர் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடும் என்பதால், முன்னதாகவே நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் அப்பகுதி எங்கும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், ஆக்கிரமிப்பாளர்களில் முதல் கட்டமாக 20 வீட்டினர் தங்களது வீடுகளை காலி செய்து விட்டு, அரசு ஒதுக்கியுள்ள அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டிற்கு குடி பெயர சம்மதம் தெரிவித்து உள்ளனர்.

அதனால் முதல் கட்டமாக பத்து வீடுகளை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு அகற்றி வருகின்றனர் மீதமுள்ள வீடுகளையும் காலி செய்வதற்கான முயற்சியில் தொடர்ந்து அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே இது குறித்த தகவல் அறிந்ததும் அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் போன்ற பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்; நாங்கள் கடந்த 60 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் குடியிருந்து வருகிறோம். எங்களது வாழ்வாதாரம் அனைத்தும் இப்பகுதியை சார்ந்தே அமைந்துள்ளது. அப்படி இருக்கையில் திடீரென்று எங்களை அப்புறப்படுத்தி, எங்களது குடியிருப்புகளை அகற்ற நினைப்பது எந்த விதத்தில் நியாயம்? நாங்கள் குடியிருந்து வரும் எங்களது குடியிருப்புகளை அகற்றாமல், உடனடியாக அரசு எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க சேமிப்பு வருகின்றனர்.

இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளால் பல்லாவரத்தில் இருந்து குன்றத்தூர் செல்லும் பிரதான சாலையில், அனகாபுத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து சென்றன.