• Sun. Feb 1st, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

பயன்பாடு அதிகரிப்பால் எலுமிச்சை விலை எகிறியது..,

பயன்பாடு அதிகரிப்பால் எலுமிச்சை விலை எகிறியது. கிலோ ரூ 160- 200க்கு விற்பனை.
வரத்துக்குறைவாலும், பயன்பாடு அதிகரிப்பாலும் ஆப்பிள் விலையை தாண்டியது எலுமிச்சை விலை. கிலோ ரூ160க்கும், 200 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொற்று நீக்கியாகவும், நஞ்சு முறிப்பு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்ட எலுமிச்சை தற்போது பல்வேறு பானங்கள் தயாரிக்கவும், ஊறுகாய் போன்றவை தயாரிக்கவும் பயன்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை மற்றும் தாண்டிக்குடி, போடி பகுதிகளில் எலுமிச்சை விவசாயம் நடைபெறுகிறது. விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கொடுத்துக் கொண்டிருக்கும் பயிர்களில் எலுமிச்சையும் ஒன்று. இவ்வளவு சிறப்புமிக்க எலுமிச்சை விவசாயத்தில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால், வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது.

மேலும் தற்போது, கோடைகாலமாதலால் எலுமிச்சையின் பயன்பாடும் அதிகரித்தள்ளதால் எலுமிச்சையின் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது. விலை உயர்வினால் எலுமிச்சம் பழத்தை பிஞ்சிலே பறிக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் தேனிமாவட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் எலுமிச்சை கிலோ ரூ 160, முதல் ரூ 200 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து எலுமிச்சை வியாபாரி ஒருவர் கூறுகையில், வரத்து குறைவால் எலுமிச்சை விலை உயர்ந்துள்ளது.

விவசாயிகளிடமிருந்து கிலோ 60 முதல் 110 ரூபாய்வரை கொள்முதல் செய்யும் இடைத்தரகர்கள் வியாபாரிகளுக்கு கிலோ ரூபாய் 100 முதல் ரூ 150 வரை விலையில் தருகின்றனர். நாங்கள் அதை வாங்கி, செலவு செய்து கொண்டு வந்து ரூ160 முதல் 200 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். இதில் விவசாயிகளையும், வியாபாரிகளையும் விட அதிக லாபம் பெறுவது இடைத்தரகர்கள் மட்டுமே என்றார்.