மதுரையில் தனிப்படை காவலர் எரித்துக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் அதிகாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள முக்குளம் அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் மலையரசன்(36). இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் தனிப்படை காவலராக பத்து ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பாண்டிச்செல்வி சமீபத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த நிலையில் மனைவியின் மருத்துவ ஆவணங்களை வாங்கச் செல்வதாக கூறி விட்டு திங்கள்கிழமை மதுரைக்கு வந்த மலையரசன் அதன் பின் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் மதுரை சுற்றுச்சாலையில் உள்ள ஈச்சனேரி கண்மாய் அருகே எரிந்த நிலையில் அவரது உடல் கடந்த 19-ம் தேதி இரவு மீட்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் மலையரசன் எரித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
பணத்திற்காக அவரை எரித்துக் கொன்றதாக ஆட்டோ ஓட்டுநர் மூவேந்திரன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை அவரை போலீசார் பிடிக்கச் சென்றனர். அப்போது அவர்களைத் தாக்கி விட்டு மூவேந்திரன் தப்பிக்க முயன்றார். அதனால் அவரை போலீசார் துப்பாக்கியால்
சுட்டதில் சுருண்டு விழுந்து காயமடைந்தார். அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்துள்ளனர். மதுரையில் இன்று அதிகாலை கொலை வழக்கில் தேடப்பட்டவரை போலீசார் சுட்டு கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.