தமிழகத்தில் இன்றும், நாளையும், மார்ச் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று (மார்ச் 24) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 25, 26-ம் தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களிலும், மார்ச் 26, 27-ம் தேதிகளிலும் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளது.




