அமெரிக்காவின் ‘புளூ கோஸ்ட்’ விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.
பூமியின் துணைக்கோளான நிலவை பல்வேறு நாடுகள் ஆய்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கான நிலவைச் சுற்றி வந்து ஆய்வு செய்வதற்க விண்கலங்களை அந்த நாடுகள் அனுப்பி வருகின்றன. இதில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே நிலவில் தரையிறங்கி பரிசோதனை செய்யும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளன.
இந்த நிலையில், நிலவில் இறங்கி பரிசோதனை செய்யும் முயற்சிகளை தனியார் நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன. இதில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த பயர்பிளை ஏரோஸ்பேஸ் நிறுவனம் கடந்த ஜனவரி 15-ம் தேதி விண்கலம் ஒன்றை அனுப்பியது. ‘புளூ கோஸ்ட்’ என்ற இந்த விண்கலம் எலான் மஸ்க்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ராக்கெட் மூலம் நிலவுக்குச் செலுத்தப்பட்டது.
நிலவின் சுற்றுப்பாதையை அடைந்த இந்த விண்கலத்தில் இருந்து லேண்டர் தனியாக பிரிந்து நேற்று நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது. நிலவின் வடகிழக்கு விளிம்பில் உள்ள பழங்கால எரிமலை குவிமாடத்தின் சரிவில் தரையிறங்கியது.தனியார் நிறுவனம் நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கியது இதுவே முதல் முறையாகும். இந்த விண்கலம், நிலவின் தரைப்பரப்பை படம்பிடித்து அனுப்பி உள்ளதில் அதன் கால்தடம் பதிவாகியுள்ளது.
இந்த விண்கலத்தில் மண் பகுப்பாய்வி, கதிர்வீச்சு சகிப்புத்தன்மை கொண்ட கணினி உள்ளிட்ட 10 கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த விண்கலம் ஒரு நிலவு நாள் முழுவதும் அதாவது 14 பூமி நாட்கள் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலாம் மார்ச் 14-ம் தேதி சூரிய ஒளியை பூமி மறைக்கும் போது உயர் திறன் கொண்ட புகைப்படங்களை எடுத்து அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




