நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து இந்த வாரம் பிக் பாஸ் சீசன் 5-ன் எவிக்ஷன் எபிசோடை யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்கிற கேள்வி பிக் பாஸ் ரசிகர்களிடையே எழுந்தது. முதலில் கமலே ஆன்லைன் வழியாக நிகழ்ச்சியை நடத்தி விடுவார் என்றார்கள். கமல் மகள் ஸ்ருதியும் ’அடுத்த சில நாட்களில் அப்பாவின் குரலைக் கேட்கலாம்’ என ட்வீட் செய்திருந்தார்.
இருப்பினும், கமலுக்குப் பதில் விஜய் சேதுபதி அல்லது சிம்பு இருவரில் யாராவது ஒருவரை சில வாரங்களுக்கு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கக் கூடும் என்ற பரவிய தகவலை, விஜய் சேதுபதி மற்றும் சிம்பு தரப்பு மறுத்துவிட்டனர். மறுபடியும் நேற்று இரவு வரை கமலே விர்ச்சுவலில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார் என்கிற முடிவுதான் இருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் தொலைகாட்சியின் தரப்பில் நடந்தன. நிகழ்ச்சியை அதற்கேற்றவாறு நடத்தத் திட்டமிட்டு வந்தனர்.
ஆனால், இன்று கமலின் உடல்நிலையைப் பரிசோதித்த மருத்துவர்கள் கோவிட் சூழலில் தொடர்ந்து பேசுவது தொண்டைக்கு நல்லதல்ல என்றார்களாம். சேனல் தரப்பிலும் ஜூம் வழியாக நிகழ்ச்சியைக் கொண்டு போவதில் டெக்னிகலாக சில பிரச்னைகள் வரலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள். இந்த இரண்டு விஷயங்களையும் புரிந்து கொண்டே கமல் தன் முடிவை மாற்றிக் கொண்டாராம். இதனால், உடனடியாக சேனல் நடிகை ரம்யா கிருஷ்ணனை அணுகி இருக்கிறார்கள். ரம்யா கிருஷ்ணனும் சம்மதம் தெரிவித்தார்.
ரம்யா கிருஷ்ணன் ஏற்கெனவே தெலுங்கு பிக்பாஸ் 3வது சீசனில் நாகர்ஜுனாவுக்குப் பதில் ஒரு வாரம் தொகுத்து வழங்கினார் என்பது நினைவிருக்கலாம். அந்த எபிசோடில் நாகார்ஜுனா வீடியோ காலில் ரம்யாவுடன் பேசியதைப் போலவே வரும் வார எபிசோடில் கமலும் ரம்யாவுடன் பேசவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.