வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் தமிழ்நாட்டில் 109 இடங்களில் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில், 37 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி மழை அளவு 39.34 மி.மீ.
தூத்துக்குடி மாவட்டத்தில் 118.82 மி.மீட்டரும், திருநெல்வேலி மாவட்டத்தில் 80.08 மி.மீட்டரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 76.40 மி.மீட்டரும், விருதுநகர் மாவட்டத்தில் 69.48 மி.மீட்டரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 67.64 மி.மீட்டரும், சிவகங்கை மாவட்டத்தில், 65.26 மி.மீட்டரும். திண்டுக்கல் மாவட்டத்தில், 63.24 மி.மீட்டரும், மதுரையில் 60.52 மி.மீட்டரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 46.41 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது. மாநிலம் முழுவதும் 3 இடங்களில் அதி கனமழையும், 8 இடங்களில் மிக கனமழையும், 87 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை 01.10.2021 முதல் 26.11.2021 வரை 580.84 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 341.33 மி.மீட்டரை விட 70 சதவீதம் கூடுதல் ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.