பாஜகவைச் சேர்ந்த ரேகா குப்தா டெல்லியின் 4வது பெண் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
கடந்த 5-ம் தேதி டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா, வீரேந்திர சச்தேவா, ரேகா குப்தா, விஜேந்தர் குப்தா, சதீஷ் உபாத்யாயா, அஜய் மஹாவர் ஆகியோரது பெயர்கள் முதலமைச்சர் பதவிக்கு அடிபட்டன. ஆனால், டெல்லிக்கு பெண் ஒருவரை முதல்வராக தேர்வு செய்ய வேண்டும் என்ற பரிந்துரை முழுமையாக பரிசீலிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை 7 மணியளவில் டெல்லி பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் பதவிக்கு ரேகா குப்தா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து ஆட்சியமைக்க ஆளுநரிடம் ரேகா குப்தா நேற்று உரிமைக் கோரினார். இதைத் தொடர்ந்து ராம் லீலா மைதானத்தில் இன்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சராக ரேகா குப்தா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ரேகாவுக்குப் பிறகு, பிரவேஷ் வர்மாவும் பதவியேற்றார். மேலும் அமைச்சர்கள் சிலரும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில துணை முதலமைச்சர் உள்பட பாஜக தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.