அரசியல் விளம்பரத்துக்காக செய்யப்படும் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க உத்தரவிட முடியாது எனக்கூறி பாமக தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.இவ்வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரித்த நிலையில், மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட்டது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிராக அதிமுக, பாஜக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக பாமக மகளிர் அணி சார்பில் சென்னையில் இன்று நடைபெற இருந்த போராட்டத்துக்கு காவல்துறை அனுமதியளிக்கவில்லை. ஆனால், காவல்துறையின் எச்சரிக்கையை மீறி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று போராட்டம் நடத்த முயன்ற பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி உள்ளிட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, போராட்டத்துக்கு அனுமதிக்க காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக வழக்கறிஞர் பாலு மனு அளித்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பி.வேல்முருகன், “பெண்கள் பாதுகாப்பில் உண்மையான கவனம் செலுத்தாமல் அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன் ?” என கேள்வி எழுப்பினார். மேலும் “போராட்டம் நடத்தும் ஒவ்வொருவரும் தங்கள் மனதில் கை வைத்து பெண்களுக்கு பாதுகாப்பு தரப்படும் என்று கூறுங்கள். இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு அனைவரும் வெட்கப்பட வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தை அனைவரும் அரசியலாக்கி வருகிறார்கள். இந்த விவகாரத்தை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும் காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விவகாரம் போராட்டம் நடத்துவதற்கான ஏற்புடையது அல்ல. வெறும் விளம்பரத்திற்காக இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள்” என்று அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து அரசியல் விளம்பரத்துக்காக செய்யப்படும் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க உத்தரவிட முடியாது என கூறி பாமக வழக்கறிஞர் பாலு தாக்கல் செய்த மனுவை அவர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.