அசாம் மாநிலத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழப்பு. திருமணமாகி ஓர் ஆண்டு கூட நிறைவடையாத நிலையில் இராணுவ வீரர் உயிரிழந்த சம்பவத்தால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டி-யை அடுத்துள்ள எம்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ராமர் என்பவரது மகன் இன்பராஜ், 2016 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தில் சேர்ந்த இந்த இளைஞர் தற்போது அசாம் மாநிலம் நிஹாம்பள்ளி முகாமில் இந்திய இராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இன்று மதியம் மலை பகுதியில் உள்ள தங்களது முகாமிற்கு இராணுவ வாகனம் மூலம் உணவு எடுத்து செல்லும் போது இவர்கள் சென்ற இராணுவ வாகனம் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் இன்பராஜ் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அவருடன் வாகனத்தை ஓட்டி வந்த இராணுவ வீரர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்பராஜ் – க்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தான் எம்.கல்லுப்பட்டியைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்பவருடன் திருமணம் முடிந்தாக கூறப்படும் சூழலில், திருமணமாகி ஓர் ஆண்டு கூட நிறைவடையாத இன்பராஜ் விபத்தில் உயிரிழந்த சம்பவத்தால் கிராம மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
நாளை மறுநாள் இந்த இராணுவ வீரரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
