• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை

Byகுமார்

Oct 17, 2024

மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருடசேவை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றானதும், ஆழ்வர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமுமான மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதம் பெளர்ணமியன்று நடைபெறும் சிறப்பு பெற்ற விழாவான ஐந்து கருடசேவை இன்று கோலாகலமாக நடைபெற்றது.

சில கோயில்களில் ஐந்துக்கும் அதிகமான கருடசேவைகள் ஒருநாளில் நிகழ்த்தினாலும் புரட்டாசி பௌர்ணமிக்கு கருடசேவை மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மட்டும் நிகழ்த்தப்படுவது தனிச்சிறப்பு.

அந்த வகையில் இன்று நடைபெற்ற ஐந்து கருட சேவையில், முன்னதாக, கூடலழகர் பெருமாள் கோயிலில் இருந்து தங்கக் கருடவாகனத்தில் வியூக சுந்தரராசப்பெருமாளும், மற்றொரு கருடவாகனத்தில் கூடலழகரும் எழுந்தருளினர்.

இதே போன்று மதுரை எழுத்தாணிக்காரத் தெருவில் உள்ள வீரராகவப் பெருமாள் கோயிலில் இருந்து வீரராகவப் பெருமாளும், வடக்குமாசி வீதியிலுள்ள வீரராகவப் பெருமாள் கோயிலில் உள்ள உற்சவரான ரெங்கநாதரும், மேலமாசி வீதி, தெற்குமாசி வீதி, சந்திப்பிலுள்ள மதனகோபாலசாமி கோயிலிலிருந்து, மதனகோபால சாமியும் கருட வாகனத்தில் கூடலழகர்கோயில் முன்பு எழுந்தருளினர்.

தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜைகளையடுத்து ஒரே சமயத்தில் ஐந்து கருட சேவையில் எழுந்தருளிய பெருமாளுக்கு மஹா தீபராதனை காட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து ஐந்து கருடவாகனங்களில் பெருமாள் நான்கு மாசிவீதிகளையும் வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது. விழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.