திருச்சியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. விவசாயி ஆன இவர் நெல் மூட்டைகளை விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் கோவை தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஆன்லைனில் கிருஷ்ணமூர்த்தி இடம் கடந்த ஜூன் மாதம் 18 டன் நெல் மூட்டைகளை ஆர்டர் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தியும் ஆன்லைனில் வந்த ஆர்டரை நம்பி லாரி மூலம் கருப்புசாமி தம்பதியர் கூறிய பல்லடம் அடுத்த லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் நெல் மூட்டைகளை இறக்கி வைத்துள்ளனர். தொடர்ந்து கருப்புசாமி கிருஷ்ணமூர்த்தி இடம் 6.62 லட்சத்திற்கான காசோலையை கொடுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி அதனை பெற்றுக் கொண்டு வங்கியில் செலுத்தி பணம் பெற முயற்சித்துள்ளார். அப்போது அந்த வங்கிக் கணக்கில் போதிய அளவு தொகை இல்லாததால் தான் ஏமாற்றம் அடைந்ததை உணர்ந்த கிருஷ்ணமூர்த்தி இது தொடர்பாக பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் இதுகுறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் 18 டன் நெல் மூட்டைகளை வாங்கிக் கொண்டு காசோலையை கொடுத்து ஏமாற்றிய கருப்புசாமி மற்றும் அவரது மனைவியை கைது செய்தனர். மேலும் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேரை வலை வீசி தேடி வருகின்றனர். பல்லடம் அருகே ஆன்லைனில் 18 டன் நெல் மூட்டைகளை ஆர்டர் செய்து 6.62 லட்சம் மோசடி செய்த சம்பவத்தில் கணவன் மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
