இன்று சமூக வலைதளங்கள் முழுவதும் போற்றிப் புகழப்படும் பெயர் ராஜேஸ்வரி. இவர், சென்னை டி.பி சத்திரம் காவல் ஆய்வாளர். நேற்று காலை, சாலையோராம் இறக்கும் தறுவாயில் மழைநீரில் மிதந்து கொண்டிருந்த ஓர் இளைஞரைத் தனது தோளில் சுமந்து சிகிச்சைக்கு அனுப்பிய படமும், வீடியோவும்தான் நேற்றும், இன்றும் மிக அதிகம் பேரால் பகிரப்பட்டது.
இது குறித்து ராஜேஸ்வரி, “மழை அதிகமாகி வெள்ளம் ஏற்பட ஆரம்பத்ததில் இருந்தே, ஆதரவற்றவர்களை மீட்டு காப்பகங்களில் சேர்ப்பது, உணவுப் பொட்டலங்கள் வழங்குவது என உதவிகளைச் செய்துவந்தோம்.
இன்று காலை ஷெனாய் நகர் கல்லறைக்கு அருகே ஒருவர் இறந்து கிடப்பதாகத் தகவல் கிடைத்தது. ஓடிப் போய் பார்த்தேன். ஒரு மரத்தடியில் குடிபோதையில் அந்த இளைஞர், தண்ணீரில் உடல் முழுவதும் ஊறிய நிலையில் மிதந்து கொண்டிந்தார். உடல் விறைத்து சுய நினைவு இல்லை. இறந்துவிட்டார் என்றுதான் நினைத்தேன். நல்ல வேளையாக, முதலுதவிகள் செய்து பார்த்தபோது, அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது.
உடனடியாக அவரைத் தூக்கி என் தோள்பட்டையில் வைத்துக்கொண்டு ஓடிவந்து அங்கிருந்த ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தேன். இப்போது அவர் சிகிச்சையில் இருக்கிறார். ஓர் உயிரைக் காப்பாற்ற முடிந்தததை நினைக்கும்போது மன நிறைவாக இருக்கிறது. இது சமூக சேவையெல்லாம் இல்லை. காவலரா நான் ஆற்றும் கடமை” என்கிறார்.
காவல்துறை அதிகாரி ராஜேஸ்வரின் சிறப்பான பணிக்கு தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவிக்கும் வகையில் அவருக்கு ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் பெருமழையில் சிக்கித் தவித்து.
முறிந்து விழுந்த மரத்தின் கீழே சுயநினைவின்றிக் கிடந்த உதயா என்பவரின் உயிர் காக்கும் முயற்சியில் துணிவுடன் ஈடுபட்டு, கோல்டன் ஹவர் எனப்படும் அந்தப் பொன்னான நேரத்தைச் சரியாக உணர்ந்து, அவரைத் தோளில் சுமந்து, ஓடிச் சென்று ஆட்டோவில் ஏற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவரை உயிர் பிழைக்க வைத்த தங்களின் அர்ப்பணிப்பு மிக்க கடமையுணர்வும், சீருடைப் பணியாளர்களுக்குரிய ஈர இதயத்தின் வெளிப்பாடும் போற்றுதலுக்குரியவை’ என பாராட்டி உள்ளார்.