• Thu. Apr 16th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் 36 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமல்

Byவிஷா

Jun 3, 2024

தமிழகத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட வேண்டிய சுங்க கட்டணம் நேற்ற நள்ளிரவு முதல் அமலுக்கு வந்திருப்பது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த 1992-ம் ஆண்டு அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்நிலையில் மார்ச் 31 நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட வேண்டிய சுங்க கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்த கட்டண உயர்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பரனூர் சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் மற்றும் 3 சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ. 70, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ. 110, மாதாந்திர கட்டணம் ரூ. 2,395. இலகுரக சரக்கு வாகனங்கள் சிற்றுந்துகளுக்கு ஒருமுறை பயணம் செய்ய ரூ. 115, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.175, பஸ், சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.245, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.365 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3 அச்சுகள் கொண்ட வர்த்தக வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.265, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.400 கட்டணம் ஆகும். 4 சக்கர, 6 சக்கர சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.380, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.570 கட்டணமாகும்.
கடும் கனரக கட்டுமான வாகனங்கள் 7 மற்றும் கூடுதல் சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.465, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.695 கட்டணம் ஆகும். உள்ளூர் கார்கள் ஒரு சுங்கச்சாவடியை கடக்க மாதம் ரூ.340 உத்தேச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.