வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்கும் என தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நாடாளுமன்றத்தின் 18 ஆவது உறுப்பினர்கள் குழுவை தேர்வு செய்யும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இத்தேர்தல் அறிவிப்பு மார்ச் மாதம் வெளியானது முதல் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் அதுவரையிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தற்போது தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை இல்லை என தெரிந்தால் 18ம் தேதியே தேர்தல் ஆணையத்தின் 1950 என்ற புகார் எண்ணுக்கு ஊழியர்கள் புகார் செய்யலாம் என்று கூறியுள்ளார். குடிமக்கள் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக இருக்கும் வகையில் தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.