கேரளா கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளதால், எரிபொருளின் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைக்க முடியாது என்று கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பெட்ரோல் விலை உண்மையாக குறைய வேண்டுமானால், டீசல் மற்றும் பெட்ரோல் மீது சிறப்பு வரி மற்றும் செஸ்வரி என்ற பெயரில் லிட்டருக்கு 30 ரூபாய் விதிக்கப்படுவதை மத்திய அரசு குறைக்க வேண்டும். பெட்ரோலியத்தின் சர்வதேச விலை ஏற்றத்தாழ்வுகளைப் பொருட்படுத்தாமல் விதிக்கப்படும் இந்த கூடுதல் வரியின் மூலம் கிடைக்கும் வருவாயின் பங்கு மாநிலங்களுக்கு கொடுக்கப்படுவதில்லை.
மக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை சிறிய அளவில் குறைக்க மத்திய அரசு முடிவு எடுத்திருக்கிறது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் மக்களின் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாக இந்த குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இது உண்மையில் ஒரு தந்திரம். மக்களின் கண்ணில் மண்ணை வீசப்போகிறார்கள்” என்று கூறியுள்ளார்.