தேனி மாவட்டம், கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில், போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை வழங்கினார்கள்.
தேனி மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் 842 மையங்களில் நடைபெறுகிறது. இதில் 91,615 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போலியோ நோய் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாடு முழுவதும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை, துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்பணிக்காக 3,496 களப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது, பாதுகாப்பானது மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது. போலியோ சொட்டு மருந்து வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு எந்தவித பின்விளைவுகளும் ஏற்படாது எனவே, பெற்றோர்கள் தங்களின் 5 வயதிற்குட்பட்ட குழந்தைளை போலியோ சொட்டு மருந்து முகாம்களுக்கு அழைத்துச் சென்று கட்டாயம் போலியோ சொட்டுமருந்து வழங்கிட வேண்டும். இந்நிகழ்வில் தேனி-அல்லிநகரம் நகர்மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) ரமேஷ்பாபு, மாவட்ட சுகாதார அலுவலர் ஜவஹர்லால், நகர் நல அலுலவர் கவிப்ரியா, நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாட்சா. உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.