• Mon. Apr 29th, 2024

தேனி மாவட்டம் இரண்டாவது புத்தகத் திருவிழாவினை கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா துவக்கி வைத்தார்.

ByI.Sekar

Mar 4, 2024

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட மேனகா மில் மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் இரண்டாவது புத்தகத் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஜெயபாரதி முன்னிலையில் தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள புத்தக அரங்குகளை பார்வையிட்டார்கள்.
புத்தகம் வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவும், அந்த காலம் முதல் இந்த காலம் வரை உள்ள பல்வேறு வகையான நூல்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து, பொதுமக்களுக்கு எளிதில் கிடைப்பதற்காக புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது. அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் இரண்டாவது புத்தகத் திருவிழா (03.03.2024) முதல் 10.03.2023 வரை 8 நாட்கள் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது,
பொதுமக்களிடையே வாசிப்பு பழக்கத்தை உருவாக்க வேண்டும் மேலும் குறிப்பாக மாணவர்களிடையே புத்தகத்தை நண்பர்களாக கருதக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இப்புத்தக திருவிழா நடத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் புத்தகத்திருவிழாவில் 43 அரங்குகள் அமைக்கப்பட்டது. இந்தாண்டு 60 அரங்குகள் அமைக்க திட்டமிடப்பட்டு, பொதுமக்களிடையே வரவேற்பு அதிகமிருந்த காரணத்தினால் கூடுதலாக 10 அரங்குள் வெளியில் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இலச்சினையாக அறிமுகம் செய்யப்பட்ட கோம்பை நாய் இந்தாண்டும் இலச்சினையாக பயணிக்கிறது.
கடந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களும் புத்தகங்கள் வாங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு ரூ.100 கூப்பன் வழங்கப்பட்டது. இந்தாண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமில்லாமல், அரசு கல்லூரி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ரூ.200–க்கு கூப்பன் வழங்கப்படுகிறது.
இந்த புத்தகத் திருவிழாவில் மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் வெற்றி பெறுவோர்களுக்கு பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது. சிறுகுழந்தைகளின் பொழுதுபோக்கிற்காக தனியாக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.புத்தகத்திருவிழா நடைபெற உள்ள எட்டு நாட்களும் பல்வேறு முக்கிய பிரமுகர்களின் பட்டிமன்றங்கள், எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் சிறப்புரைகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. முதல் நாளான இன்று விஜய் தொலைக்காட்சி பிரபலங்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே வாசிப்பு பழக்கத்தை வளர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வாசிப்பை வசமாக்கும் நோக்கில், மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இப்புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு உங்களுடைய தேடலுக்கான சிறந்த புத்தகங்கள் மற்றும் அறிவு சார்ந்த புத்தகங்களை அதிக அளவில் வாங்கி அறிவுத்திறனை வளர்த்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து புத்தகங்களையும் வாங்கி கொடுத்து தேனியில் நடைபெறும் இரண்டாவது புத்தகத் திருவிழாவை மேலும், சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.

இவ்விழாவில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், தேனி-அல்லிநகரம் நகராட்சி நகர்மன்றத்தலைவர் பா.ரேணுபிரியா, மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத்தலைவர் ராஜபாண்டியன், பழனிசெட்டிபட்டி பேரூராட்சித்தலைவர் மிதுன்சக்கரவர்த்தி  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிந்து, வருவாய் கோட்டாட்சியர்கள் முத்துமாதன் (பெரியகுளம்), தாட்சாயினி (உத்தமபாளையம்) மற்றும்  அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *