தேனி மாவட்டம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நவீன கண்புரை நோய் தடுப்பு அறுவை சிகிச்சையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ச.பாலசங்கர் முன்னிலையில் தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண் மருத்துவப் பிரிவுக்கு தினமும் அதிகளவில் கண் பாதிப்புடன் முதியோரும், இளம்வயதினரும் சிகிச்சைக்காக வருகை தருகின்றனர். கடந்த ஆண்டு சுமார் 1,500 நோயாளிகளுக்கு கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுநாள் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்கைக்காக இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை மருத்துவமனையில் தங்க வைத்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. நோயாளிகளின் நலன் கருதி நோயாளிகளுக்கு வலியின்றி, ஊசி இல்லாமல், தையல் இல்லாமல், மருத்துவமனையில் உள்நோயாளிகளாக மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லாமல் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக சுமார் 15 லட்சம் மதிப்புள்ள அதிநவீன கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் கருவி மருத்துவ பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இக்கருவியின் மூலம் கண்புரை நோய் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்கள். இதன்மூலம் நோயாளிகள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட அன்றைய தினமே தேவையான மருந்துகளுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். தற்சமயம் வாரத்திற்கு ஒருநாள் இந்த சேவைத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இச்சேவையை எதிர்காலத்தில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் தலைமை கண் மருத்துவர் மரு.சு.கணபதிராஜேஸ், உள்ளிட்ட பல கண் மருத்துவர்கள் மற்றும் கண்மருத்துவ பிரிவு செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.