விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், பாஜக.வில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், 370 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்கான வியூகம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று அக்கட்சியின் மையக்குழு டெல்லியில் கூடுகிறது. இதனை தொடர்ந்து, முதற்கட்டமாக 150 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட பாஜக திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் போட்டியிட உள்ள தொகுதிகளின் பட்டியல் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், கடந்த தேர்தலில், தோல்வி அடைந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தும் பொருட்டில் அதற்கான வேட்பாளர்களும் முதற்கட்ட பட்டியலில் இடம்பெறுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கான வேட்பாளராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பாஜகவின் மையக்குழு கூட்டத்தில் பங்கேற்க பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் டெல்லி செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.