• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

‘ஜெய்பீம்’ படத்தை பாராட்டிய முதல்வர்.. நன்றி தெரிவித்த சூர்யா

Byமதி

Nov 1, 2021

சூர்யா நடிப்பில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ள ‘ஜெய்பீம்’ திரைப்படத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”ஜெய்பீம்‌ படக்‌ குழுவினருக்கு வணக்கம்‌! நேற்றையதினம்‌ ‘ஜெய்பீம்‌’ படத்தைப்‌ பார்த்தேன்‌. அதன்‌ நினைவுகள்‌ இரவு முழுவதும்‌ மனதைக்‌ கனமாக ஆக்கிவிட்டன. விளிம்புநிலை இருளர்‌ மக்களின்‌ வாழ்வியலையும்‌, அவர்கள்‌ அனுபவித்து வரும்‌ துன்ப துயரங்களையும்‌ இதனைவிடத்‌ துல்லியமாக, கலைப்பூர்வமாகக்‌ காட்சிப்படுத்த இயலாது என்பதைக்‌ காட்டிவிட்டீர்கள்‌. நடந்த ஒரு நிகழ்ச்சியை மையமாக வைத்து புனையப்பட்ட திரைக்கதையாக இருந்தாலும்‌ அது பார்வையாளர்‌ மனதில்‌ ஏற்படுத்திய தாக்கம்‌ என்பது மிகமிகக்‌ கனமானதாக இருக்கிறது.

சில நேரங்களில்‌ சில காவல்‌ துறை அதிகாரிகள்‌ செய்யும்‌ தவறுகள்‌, அந்தத்‌ துறைக்கே மாபெரும்‌ களங்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதேநேரத்தில்‌, உண்மையை வெளிக்கொண்டு வர இன்னொரு காவல்‌ துறை அதிகாரியே துணையாக இருக்கிறார்‌ என்பதையும்‌ காட்டி இருக்கிறீர்கள்‌. நேர்மையும்‌, மனசாட்சியும்‌ கொண்ட அதிகாரிகளால்‌ உண்மை நிலைநாட்டப்படும்‌ என்பதையும்‌ காட்டி உள்ளீர்கள்‌.

சட்டமும்‌ நீதியும்‌ கொண்டு எத்தகைய அவலத்தையும்‌ துடைத்தெறிய முடியும்‌ என்பதையும்‌ எடுத்துச்‌ சொல்கிறது இந்தப்‌ படம்‌, ஒரு வழக்கறிஞர்‌ (சந்துரு), ஒரு காவல்‌ துறை அதிகாரி (ஐஜி பெருமாள்சாமி) ஆகிய இருதரப்பும்‌ நினைத்தால்‌ சமூக ஒழுங்கீனங்களைத்‌ தடுத்து நிறுத்த முடியும்‌. அமைதியான, அதேநேரத்தில்‌, அழுத்தமான வழக்கறிஞராக நண்பர்‌ சூர்யா அவர்கள்‌ திறம்பட நடித்துள்ளார்‌. நடித்துள்ளார்‌, என்பதைவிட, வழக்கறிஞர்‌ சந்துருவாகவே வாழ்ந்துள்ளார்‌. இக்கதையைத்‌ தேர்வு செய்ததும்‌, அதனைப்‌ படமாக எடுத்ததும்‌, அதில்‌ தானே நடித்ததுமென மூன்று பாராட்டுகளை சூர்யா பெறுகிறார்‌.

கதைக்களத்தை கலைக்களமாக மாற்றிச்‌ சிறப்பாக இயக்கியுள்ள இயக்குநர்‌ த.செ. ஞானவேல்‌ உள்ளிட்ட படக்குழுவினர்‌ அனைவருக்கும்‌ எனது பாராட்டுகளைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இதுபோன்ற படங்கள்‌ ஏராளமாக வரவேண்டும்‌ என்பதே எனது ஆசையும்‌ விருப்பமும்‌ ஆகும்‌. இருளர்‌ குறித்த படம்‌ எடுத்ததோடு தனது கடமை முடிந்துவிட்டது எனக்‌ கருதாமல்‌, பழங்குடியினர்‌ பாதுகாப்புச்‌ சங்கத்தின்‌ மேம்பாட்டுக்கு ஒரு கோடி ரூபாய்‌ நிதியினை நண்பர்‌ சூர்யா அவர்கள்‌ வழங்கியது என்னை நெகிழச்‌ செய்தது. இருளர்‌ வாழ்வில்‌ ஒளியேற்றும்‌ முயற்சியாகும்‌ இது. இதுபோன்ற செயற்கரிய செயல்களை அனைவரும்‌ செய்ய வேண்டும்‌.

ஜெய்பீம்‌’ படம்‌ பார்க்க நான்‌ சென்றபோது சென்னை உயர்நீதிமன்றத்தின்‌ ஓய்வு பெற்ற நீதியரசர்‌ சந்துருவைச் சந்தித்தேன்‌. (நீதியரசர்‌ என்று யாரையும்‌ சொல்லக்‌ கூடாது என்று சொல்பவர்‌ அவர்‌. ஆனாலும்‌ எங்களுக்கு அவர்‌ நீதியரசர்தான்‌) அவர்‌ என்னிடம்‌ நீதியரசர்‌ இஸ்மாயில்‌ ஆணையத்தின்‌ அறிக்கையைக்‌ கொடுத்தார்கள்‌. மிசா சட்டத்தின்படி நாங்கள்‌ கைது செய்யப்பட்டது குறித்த விசாரணை ஆணையத்தின்‌ அறிக்கை அது. காவல்‌ நிலையம்‌ ஒன்றில்‌ நடந்த இதேபோன்ற தாக்குதல்தான்‌ சென்னை மத்திய சிறையில்‌ 1976 ஆம்‌ ஆண்டு பிப்ரவரி 2 ஆம்‌ நாள்‌ இரவு எனக்கும்‌ நடந்தது.

என்‌ மீது விழுந்த பல அடிகளைத்‌ தாங்கியவர்‌ மரியாதைக்குரிய சிட்டிபாபு அவர்கள்‌. அதனால்‌ அவரது உயிரே பறிபோனது. அன்று நடந்த சித்திரவதைகளை ‘சிறை டைரி’யாக சிட்டிபாபு அவர்கள்‌ எழுதி உள்ளார்கள்‌. இந்த நினைவுகள்‌ அனைத்தும்‌ நேற்று ‘ஜெய்பீம்‌’ பார்த்துவிட்டு வெளியில்‌ வந்தபோது என்‌ மனக்கண்‌ முன்‌ நிழலாடியது.இப்படி பல்வேறு தாக்கங்களை என்னுள்‌ ஏற்படுத்தக்‌ காரணமான ‘ஜெய்பீம்‌’ படக்‌ குழுவினருக்கு எனது பாராட்டுகள்‌ ! நண்பர்‌ சூர்யாவுக்கு எனது வாழ்த்தும்‌ நன்றியும்‌!” என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சரின் இந்த பதிவுக்கு ட்விட்டர் வாயிலாக நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உணர்வுப்பூர்வமான பாராட்டு, ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது. ஜெய்பீம் படக்குழுவினர் அனைவரின் சார்பாகவும் நமது தமிழக முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.