• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

அரசூர் கிராம மக்கள் ஒன்று கூடி சாலை மறியல் போராட்டம்..!

Byவிஷா

Oct 16, 2023

திருவையாறு அருகே உள்ள கிராம மக்கள் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை எனக் கூறி சாலை மறியல் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ளது அரசூர் கிராமம். இந்த கிராமத்தில் மொத்தம் 320 குடும்பங்கள் இருப்பதாகவும், அவர்களில் 250 குடும்பங்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்றும் அந்த மக்கள் ஊர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அனைவரது விண்ணப்பமும் தவறான காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறி இன்று காலை ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தஞ்சாவூர் – திருவையாறு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் இறங்கினர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.
இந்த தகவல் அறிந்ததும் நடுக்காவேரி காவல் நிலைய போலீஸார் மற்றும் தஞ்சாவூர் வட்டாட்சியர் உள்ளிட்டவர்கள் உடனடியாக வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தகுதியான அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதேபோல விழுப்புரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கடந்த சில தினங்களுக்கு முனபு உரிமைத் தொகை கேட்டு சாலை மறியல் நடந்தது. இந்த நிலையில் தற்போது தஞ்சாவூர் மாவட்டத்திலும் சாலை மறியல் போராட்டம் நடந்துள்ள நிலையில் உரிமைத் தொகை விவகாரம் தமிழக அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்த தொடங்கியுள்ளதாக தெரிகிறது.