• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

May 23, 2023

சிந்தனைத்துளிகள்

உழைத்தால் உலகம் உன்வசம்!!!

ஓர் அதிகாலையில், அமெரிக்காவிலிருந்து விமானம் ஒன்று கிளம்பியது. கிளம்பிய அரைமணி நேரத்தில் அனைவரும் உறங்க ஆரம்பித்தனர். ஒரு வயதான பெரியவர் மட்டும் சில புத்தகங்களைப் படித்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கருகில் இருந்த இளைஞர், அவர் அமெரிக்காவின் மிகச்சிறந்த மனிதரும், தொழிலதிபருமான ராக்பெல்லர் என்பதைத் தெரிந்துகொண்டார்.
“ஐயா, நீங்கள்தான் ஏகப்பட்ட பணமும், புகழும் பெற்றுவிட்டீர்களே! இன்னும் இந்த வயதான காலத்தில் ஏன் உழைக்கிறீர்கள்? நிம்மதியாகத் தூங்க வேண்டியதுதானே?” என்றார். “சரிதான், இப்பொழுது விமானி இவ்விமானத்தை நல்ல உயரத்தில் பறக்க வைத்துவிட்டார். விமானமும் சுலபமாகப் பறக்கிறது. இப்பொழுது விமானி என்ஜினை அணைத்துவிட்டால் என்னவாகும்?” என்றார்.
“விமானம் கீழே விழுந்து பெரிய விபத்து ஏற்பட்டுவிடுமே” என பதற்றத்தோடு பதிலளித்தார் இளைஞர். இதைக்கேட்டு புன்னகைத்த ராக்ஃபெல்லர், “வாழ்க்கைப் பயணமும் இப்படித்தான்.
கடுமையாக உழைத்து உயரத்துக்கு வர வேண்டியுள்ளது. வந்த பிறகு, “உயரத்தைத் தொட்டு விட்டோமே’ என்று உழைப்பதை நிறுத்தி விட்டால், தொழிலில் விபத்து ஏற்பட்டு விடும்.
உழைப்பு என்பது வருமானத்துக்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதிக்காகவும்தான்” என்று பதிலளித்தார். அப்பயணத்தில் அவ்விளைஞனுக்கு வாழ்க்கையை விழிப்படையச் செய்தவர் ராக்பெல்லர்.
உழைப்பு ஒரு நதியைப் போன்றது. அதன் பயணம் பல தடைகளைத் தாண்டிச் சென்றாலும், அது செல்லும் வழியெல்லாம் நம்பிக்கைப் பூக்களை மலரச் செய்கிறது. வறண்டிருக்கும் நதி தன்னுள் உள்ள ஊற்றினால் நீரினைத் தருவதுபோல், உலகிற்கு தனது அனுபவங்களால் வாழ்வின் செழிப்பினைத் தருவதுதான் உழைப்பு.

உழைப்பதால் உழைத்தவரின் மதிப்பு கூடுவதோடு, உழைப்பின் மதிப்பும் உயரும். கல்லினில் உழைத்தால் மனிதன் சிற்பியாவான், கல் சிற்பமாகும். சொல்லினில் உழைத்தால் மனிதன், கவிஞனாவான். வார்த்தைகள் கவிதையாகும்.