• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

காஞ்சிபுரம் உள்ளாவூர் அகஸ்தீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவ விழா..!

Byவிஷா

Apr 5, 2023

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுக்காவிற்கு உட்பட்ட உள்ளாவூர் கிராமத்தில் அகத்தியர் வணங்கிய பிரசித்தி பெற்ற அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகஸ்தீஸ்வரர் திருக்கோவிலில் தெப்ப உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது.
இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர நட்சத்திரத்தை ஒட்டி திருக்கல்யாண வைபவமும் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, தொடர்ந்து கிராம மக்கள் சீர்வரிசைகளை எடுத்து வர அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கும் அகத்தீஸ்வரர் பெருமானுக்கும் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடத்தப்பட்டு ஊஞ்சல் சேவை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, ஐந்தாவது ஆண்டு தெப்ப உற்சவத்தை ஒட்டி மேள தாள, தாரை தம்பட்டம், ஒலிக்க, அதிர் வேட்டுகள் வெடிக்க, சிறப்பு அலங்காரத்தில் அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரப் பெருமான் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, கோவில் குளத்தில் வாழை மரங்கள், மாவிலை தோரணங்கள், மலர் மாலைகள், கட்டி மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத் தேரில் 5 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.