தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெண் ஒருவர் மாலையாக கட்டி அணிந்து வந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். மாவட்டத்தின் பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் குறைகளை மனுக்களாக அளித்தனர். அந்த வகையில் மூதாட்டி ஒருவர் இதுவரை தான் அளித்த கோரிக்கை மனுக்களை மாலையாக கோர்த்து அணிந்து வந்தார்.
இது குறித்து பேசிய அவர்..,
என் பெயர் உஷா (64). தஞ்சை மானம்புச்சாவடியில் எனது தந்தை ஆரோக்கியதாசுடன் (98) வசித்து வருகிறேன். நான் திருவையாறு பேரூராட்சியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி கடந்த 2017ம் ஆண்டு ஓய்வு பெற்றேன். எனது சம்பளத்தில் ரூ.1.78 லட்சம் பிடித்தம் செய்யப்பட்டது.
இதில் ரூ.75 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டது. மீதமுள்ள தொகை ரூ.1.03 லட்சம் இதுவரை வழங்கப்படவில்லை. கடந்த 6 ஆண்டுகளாக பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் இதுவரை 6 முறை மனுக்கள் கொடுத்துள்ளேன். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புலம்பினார்.
இதனால் தான் இதுவரை கொடுத்த மனுக்களை மாலையாக அணிந்து வந்தேன். எனது தந்தை மிகவும் வயதான நிலையில் உள்ளார். அவரது மருத்துவச் செலவுகளுக்கு கூட பணமின்றி தவிக்கிறேன். இனியும் காலம்தாழ்த்தாமல் எனக்கு சேர வேண்டிய தொகையை வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.