மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி இந்திரா காலனியில் மதுரை ஜெயந்திபுரத்தைச் சேர்ந்த சரவணபாண்டி என்பவர் தனது நண்பர் முனியாண்டி வீட்டில் தங்கி இருந்து வீடுகளில் மொசைக் பால் சீலிங் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அங்கு தனது நண்பர் மோகன்ராஜ் உடன் பேசிக்கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில் இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்த நண்பர்களான வினோத்குமார், மது பாலாஜி, பாலமுருகன், மணிகண்டன் ஆகியோர் மோகன்ராஜ் மற்றும் சரவண பாண்டியை மம்பட்டியால் சரமாரியாக தாக்கியதில் சரவணபாண்டி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மோகன்ராஜ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் சரவணன் பாண்டியை கொலை செய்த நண்பர்கள் வினோத்குமார் வயது 32, மது பாலாஜி வயது 26, பாலமுருகன் வயது 23, மணிகண்டன் வயது 24 ஆகியோரை வாடிப்பட்டி போலீசார் கைது செய்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில் நண்பர்களுக்குள் மது அருந்துவதில் தகராறு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து சரவணபாண்டியை கொலை செய்ததாகவும் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட சரவணன் பாண்டி மீது, ஏற்கனவே மதுரையில் வழக்கு உள்ளதால் வழக்கிற்கு பயந்து வாடிப்பட்டி பகுதியில் பதுங்கி இருந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். மது போதையில் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உடன் இருந்த நண்பனையே கொலை செய்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.