கன்னியாகுமரியில் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான 4 நாள் பயிற்சி முகாம் துவங்கியது .
நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் காரைக்குடி மாநகராட்சியை சேர்ந்த கவுன்சிலர்களுக்கு 4 நாள் பயிற்சி முகாம் கன்னியாகுமரியில் இன்று துவங்கியது.
தமிழ்நாடு நகராட்சிகள் திருத்திய சட்டம் 1998 மற்றும் விதிகள் குறித்து மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி இன்று கன்னியாகுமரி கொடைக்கானல் ஊட்டி மற்றும் மாமல்லபுரம் ஆகிய நான்கு இடங்களில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த மாநகராட்சியின் கவுன்சிலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் துவங்கின.

இதன்படி கன்னியாகுமரியில் நாகர்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலி, காரைக்குடி ஆகிய மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான பயிற்சி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக விடுதியில் துவங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் நேற்று 50 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
காரைக்குடி மாநகராட்சி துணை மேயர் குணசேகரன் இந்த பயிற்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த பயிற்சியில் இரண்டு பிரிவுகளாக 200 பேர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் கவுன்சிலர்களுக்கான பொறுப்புகள் மற்றும் கடமைகள், அவர்கள் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள், அரசியல் ரீதியாக அவர்களுக்கு உரிய உரிமைகள், போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. நிதி நிர்வாகம், தொழில் நுட்பம், பணியாளர் சேவைத்திறன், மற்றும் மாநகராட்சி மன்ற விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டன.
இத்துறையில் பயிற்சி பெற்ற ஓய்வு பெற்ற அதிகாரிகள் ராஜா மணி,மகாதேவன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். தமிழ்நாடு நகர் புற கல்வி இயக்ககம் இந்த பயிற்சியை அளிக்கிறது.




