


அமெரிக்காவில் 2 பேரை சுட்டுக்கொன்ற மர்மநபர் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார்.
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள எல்கார்ட் நகரில் வணிக வளாகம் செயல்படுகிறது. அங்குள்ள ஒரு கடைக்கு பொருட்கள் வாங்குவது போல் சென்ற இளைஞர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தார். இதில் கடைக்குள் இருந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த இளைஞர் போலீசாரை நோக்கியும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிகிறது. இதில் 2 போலீசார் படுகாயம் அடைந்தனர். அதற்கு பதிலடியாக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அந்த இளைஞர் கொல்லப்பட்டார்.
அமெரிக்காவில் 2024-ம் ஆண்டில் மட்டும் 385 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

