• Sun. May 3rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

3 இலட்சம் வணிகர்கள் வரிகள் செலுத்தவில்லை..

ByA.Tamilselvan

Jul 16, 2022

தமிழகத்தில் 3 இலட்சம் வணிகர்கள் வரிகள் செலுத்தவில்லை, அனைத்து வணிகர்களும் வரி செலுத்தினால் தமிழகம் வளர்ச்சியடையும் என மதுரையில் அமைச்சர் மூர்த்தி பேச்சு.
மதுரை தெப்பக்குளத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் முப்பெரும் விழாவில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை எம்.பி சு.வெங்கடேசன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேசுகையில்
“தமிழகத்தில் உள்ள வணிகர்கள் மட்டுமே மாநிலம் முழுதும் வணிகம் செய்ய வேண்டும், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுகளில் இருந்து தமிழகத்தில் வணிகம் செய்ய அனுமதிக்க கூடாது, தமிழகத்தில் 3 இலட்சம் வணிகர்கள் வரிகள் செலுத்தவில்லை, வணிகர்கள் முறையாக வரி செலுத்தினால் தமிழகம் வளர்ச்சியடையும், வணிகர் வரி செலுத்தினால் அவர்களுக்கு தமிழக அரசு என்றும் துணை நிற்கும், தமிழக அரசின் வருவாயில் 85 சதவீதம் வருவாய் பத்திரப்பதிவு மற்றும் வணிக வரி வழியாக கிடைக்கிறது. தமிழக அரசுத்துறையில் யார் தவறு செய்தாலும் முதல்வர் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டார். அரசுத் துறைகளில் பல்வேறு சீர் திருத்தங்கள் செய்யப்பட்டு வருகிறது.
வட மாநிலத்தவர் தமிழகத்தில் செய்யும் வணிகத்தில் வரி முறைகேடு செய்கிறார்கள். வட மாநில வணிகர்களை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த தமிழக வணிகர்கள் முன் வர வேண்டும்.

அதிமுக ஆட்சியில் பணம் கொடுத்தால் தான் வணிகம் செய்ய வேண்டிய சூழல் இருந்தது.திமுக ஆட்சியில் வணிகர்கள் சுதந்திரமாக வணிகம் செய்து வருகிறார்கள்.வணிகர்கள் நல வாரியம் அமைப்பதில் எந்தவொரு தடையுமில்லை, உறுப்பினர்கள் சேர்க்கையால் மட்டுமே வணிகர்கள் நல வாரியம் அமைப்பதில் காலதாமதம் ஆகிறது” என பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி கூறுகையில் “அரிசி உள்ளிட்ட பொருட்களுக்கு ஒன்றிய அரசு விதித்த ஜி.எஸ்.டி வரியை வாபஸ் பெற வேண்டும், மதுரையில் நடைபெறவுள்ள ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம். ஜி.எஸ்.டி வரி ஏற்ற தாழ்வுகளை சரி செய்ய முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்” என கூறினார். பின்னர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கூறுகையில் “புதிதாக 5 சதவிகித வரி விதிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் 22 ஆம் தேதி போராட்டம், புதிய ஜி.எஸ்.டி வரி அறிவிப்பை வாபஸ் பெறவில்லை என்றால் டெல்லியில் போராட்டம் நடத்தப்படும்” என கூறினார்.