சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்தி பலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் புகழேந்தி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த சிறுமியை சங்கிலி தொடர்போல் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு விருந்தாக்கியது தெரியவந்தது. இவ்வழக்கில் மொத்தம் 26 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, 7 பெண்கள், காவல் ஆய்வாளர் புகழேந்தி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், சிறுமியின் உறவினர் உள்ளிட்ட 21 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. அவர்களுக்கான தண்டனை விவரம் வரும் 19ம் தேதி அறிவிக்கப்படுகிறது.