குடும்பத்தகராறு காரணமாக தந்தை தலையில் அம்மிக்கல்லை தூக்கிபோட்டு கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மகிழங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி கூடலிவயல். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராபர்ட் கென்னடி வயது 50.கூலி விவசாயி. இவரது மனைவி எலிசபெத். இவர்களது மகன் ஆரோக்கிய அருள் வில்டன்ஸ் வயது 27. இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் ராபர்ட் கென்னடிக்கும் அவரது மனைவியை எலிசபத்திற்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக சண்டை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மகன் ஆரோக்கிய அருள வில்டன்ஸ் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆரோக்கிய அருள் வில் டன்ஸ் வீட்டில் இருந்த அம்மிக்கல்லை தூக்கி தந்தை ராபர்ட் கென்னடியின் தலையில் போட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்துடன் துடிதுடித்து ராபர்ட் கென்னடி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த சேதுபாவாசத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராபர்ட் கென்னடியின் உடலை கைப்பற்றி பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். மேலும் இதுபற்றி வழக்கு பதிவு செய்து மகன் ஆரோக்கிய அருள் வில்டன்ஸை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற மகனே தந்தையை அம்மிக்கல்லை தூக்கி போட்டு கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.