பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்ப வசதியாக இன்று 4 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன
நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இன்று மாலையில் இருந்து அதிகளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோவை, திருப்பூர், திருச்சி, பெங்களூர், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பகல் நேரத்திலும் கூடுதலாக பேருந்துகள் விடப்பட்டுள்ளன.இன்று இரவுக்குள் பெரும்பாலானவர்கள் சென்னை வந்து சேர திட்டமிட்டு பயணத்தை தொடங்கி உள்ளனர். இதே போல நீண்ட தூரத்தில் இருந்து கார்களில் பயணம் செய்யக்கூடியவர்களும் காலையில் பயணத்தை தொடங்கியுள்ளனர்.. 2,100 வழக்கமான பேருந்துகளும், 1941 சிறப்பு பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர பிற நகரங்களுக்கு 2,061 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. இதனால் பெருங்களத்தூர், கோயம்பேடு பேருந்து நிலைய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவையும் நாளை காலை 5 மணி முதல் இயக்கப்படுகிறது.