கோவை மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையில், ₹181 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார், கடத்தலில் ஈடுபட்ட தேனியைச் சேர்ந்த நபரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் K. ரெட்டி, உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கப் போலிஸார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், கருமத்தம்பட்டி பகுதி தனியார் கல்லூரி சாலை அருகே சட்ட விரோதமாகக் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாகப் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், அங்குச் சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த நபரையும் அவரது உடைமைகளையும் சோதனையிட்டனர்.
சோதனையில், அவரிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 181 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், அவர் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி (38) என்பது தெரியவந்தது.

இவர் ஒடிசா மாநிலத்திற்கு நேரில் சென்று கஞ்சாவைக் கொள்முதல் செய்து உள்ளார். அங்கு இருந்து கேரளா நோக்கிச் சென்ற சரக்கு லாரி மூலம் கஞ்சாவைக் கடத்தி வந்து, கருமத்தம்பட்டி பகுதியில் இறக்கி உள்ளார். அங்கிருந்து தேனி, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பி விற்பனை செய்யத் திட்டமிட்டு இருந்தது விசாரணையில் அம்பலமானது.
இதை அடுத்துச் சிரஞ்சீவியைக் கைது செய்த போலீஸார், அவர் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் (NDPS Act) கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
மேலும், இதில் தொடர்புடைய லாரி மற்றும் பின்னணியில் உள்ள நபர்கள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




