12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்க உறுப்பினர்கள், அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.
தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தி, தொழிலாளர் சட்ட விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது. அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் 12 மணி நேரம் வேலை, வாரத்திற்கு 3 நாட்கள் விடுமுறை என்ற மசோதா கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் கணேசன் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தி.மு.க கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.
இருப்பினும், அந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. தி.மு.க அரசின் முடிவுகளுக்கு கூட்டணி கட்சிகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவந்த நிலையில், இந்த விவகாரத்துக்கு முதன்முறையாக கூட்டணி கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தன. இந்த மசோதாவுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு இடங்களில் தொழிற்சங்க ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடும் எதிர்ப்பு தெரிவித்த தொழிற்சங்கங்கள் வரும் 12-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தன. இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில், தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.