மதுரை தனக்கன்குளம் பகுதியில் நகைச்சுவை நடிகர் மதுரை முத்து அவரது இடத்தில் அமைக்கப்பட்ட நூலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, நூலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏழை மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு புத்தகங்கள், புத்தாடைகள், மரக்கன்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் நூலகங்கள் மற்றும் புத்தகங்கள் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றுகின்றன என்றார். தங்களுக்கு விருப்பமான துறையில் மாணவர்கள் புத்தகங்களைப் படித்து முன்னேறுவதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இன்றைய இளைஞர்களுக்கு அறிவுத் திறன் அதிகரித்துள்ளதாக கூறிய அவர், படைப்பாற்றல் சிறப்பாக இருப்பதாக பாராட்டினார். ஆனால், சமூகப் பொறுப்புணர்வு மற்றும் சமூக இயக்கங்களில் அவர்கள் சரியாக இருக்கிறார்களா என்ன தெரியவில்லை.

தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை நான் ஏற்க்கமாட்டேன், இரண்டு மொழிகள் போதுமானவை என்றும், தேவையான நேரத்தில் மற்றொரு மொழியை கற்றுக்கொள்ளலாம் மும்மொழி தேவையில்லை என்றும் கூறினார்.
மேலும், மும்மொழிக் கொள்கை எதிர்காலத்தில் வேறு ஒரு மொழியை திணிப்பதற்கான வழியாக அமையக்கூடும் என்றார்.
தற்போதைய முதலமைச்சர் செயல்பாடு எப்படி உள்ளது? காலம் போகட்டும் பார்ப்போம் இதுவரை நல்லா இல்லை இதற்குப் பின்பு நல்லா இருக்கலாம்.

குடும்பங்களில் பணத்தை அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் நிலை உருவாகி, பாசமும் உறவுகளும் குறைந்து வருவதாகவும் அவர் கவலை தெரிவித்தார். நாட்டுப்பற்று வளர வேண்டும் என்றும், எந்தக் கட்சியில் இருந்தாலும் நாட்டின் முன்னேற்றத்திற்காக செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், சமுதாயத்தில் பணத்தின் ஆதிக்கமும், அனைத்து நிலைகளிலும் லஞ்சம் அதிகரித்திருப்பதும் ஒழுக்கம் மற்றும் பண்பாட்டு மதிப்புகள் குறைவதற்கு காரணமாக இருப்பதாக சாலமன் பாப்பையா தெரிவித்தார்.




