வெளிநாட்டினருக்கு நடத்திய பரிசோதனைகளில் எக்ஸ்பிபி.1 வைரஸ் 14 பேருக்கும், பிஎப்.7.4.1. வைரஸ் ஒருவருக்கும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், இந்திய விமான நிலையங்களில் வந்திறங்குகிற வெளிநாட்டு பயணிகளில் 2 சதவீதத்தினருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. டிசம்பர் 24ம் தேதியில் இருந்து, கடந்த 3ம் தேதி வரையில் இப்படி 19 ஆயிரத்து 227 பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 124 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் 40 மாதிரிகளுக்கான முடிவுகள் வந்துள்ளன. அவற்றில் 11 ஒமைக்ரான் துணை வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக எக்ஸ்பிபி.1 வைரஸ் 14 பேருக்கும், பிஎப்.7.4.1. வைரஸ் ஒருவருக்கும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் இந்த உருமாறிய ஒமைக்ரான் துணை வகை வைரஸ்கள் புதிது அல்ல, ஏற்கனவே இந்தியாவில் நுழைந்திருப்பவைதான் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதைக் கண்டு பொதுமக்கள் பதற்றம் அடையத்தேவையில்லை என்றும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேட்டுக்கொண்டுள்ளார்.