உசிலம்பட்டி அருகே சட்டவிரோதமாக விற்பனை செய்ய வீட்டில் 22 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக்கில், குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 1 லட்சம் அபராதமும் விதித்து மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அல்லி தீர்ப்பளித்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னக்குறவடியைச் சேர்ந்த சக்தி என்ற கூலி தொழிலாளி அவரது வீட்டில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அந்த ஆண்டு உசிலம்பட்டி காவல் ஆய்வாளராக இருந்த ( தற்போது காவல் துணைக் கண்காணிப்பாளராக உள்ள ) ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சின்னக்குறவடியில் உள்ள சக்தி என்பவரின் வீட்டில் அதிரடி சோதனை செய்த போது அவரது வீட்டில் 22 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்த போலீசார், இந்த பதுக்கல் தொடர்பாக சக்தியை கைது செய்து, வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, குற்றவாளியான சின்னக்குறவடியைச் சேர்ந்த சக்தி என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.