சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்தவர் ராஜேஷ்வரன். இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சவூதி அரேபியாவில் வேலைக்கு சென்றுள்ள நிலையில், கடந்த ஜூன் 3ம் தேதி பணியில் ஈடுபட்டு கொண்டு இருக்கும்போது கான்கிரீட் சுவர்கள் தலையில் விழுந்த விபத்தில் உயிரிழந்தார். கம்பெனி நிர்வாகம் தகவல் தெரிவிக்காத நிலையில் நண்பர்கள் மூலம் தகவல் அறிந்த ராஜேஸ்வரனின் மனைவி சௌந்தரம்(25) மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் பலமுறை மனு அளித்தும் உடலை மீட்கப்படாத நிலையில் இன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது இரு குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்பொழுது இறந்த ராஜேஸ்வரனின் உடலை மீட்டுத்தரக் கோரியும், உரிய இழப்பீடு பெற்றுத் தரக்கோரியும் உறவினர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். இளம் வயதில் கணவனை இழந்து அவரது உடலை மீட்டு தர கண்ணீருடன் பிள்ளைகளுடன் போராடிவரும் அபலைப் பெண் சௌந்தரம் நிலையை எண்ணி கூடியிருந்த அனைவரும் வேதனை தெரிவித்தனர்.