ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழா ஆடி மாதம் நடைபெறும். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அன்று பெரிய திருத்தேரோட்டம் நடைபெறும்.
தற்போது கொரோணா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதிலுமுள்ள வழிபாட்டுத் தளங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டுபாடுகள் விதிக்கபட்டு வருகிறது. இருந்தபோதிலும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறக்கூடிய கோவில் விழாக்கள் தடையின்றி நடைபெற வேண்டும் என்பதற்காக ஒரு சில நிபந்தனைகளுடன் கோவில் வளாகத்திலேயே திருவிழாக்கள் பக்தர்கள் அனுமதியின்றி நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆடிப்பூர விழா துவங்கியது. ஆண்டாளின் திருநட்சத்திரமான ஆடி பூரம் தேரோட்டத்தில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். தற்போது கொரோனாவை கட்டுபடுத்தும் விதிமுறைகள் அமலில் உள்ளதால் கோவில் வளாகத்திற்கு உள்ளே நடைபெற்ற தங்கத்தேரோட்டம் நிகழ்ச்சியில் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் எழுந்தருள திருக்கோயில் பட்டர்கள், மாவட்ட ஆட்சியாளர் மேகநாத ரெட்டி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு தங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். கடந்த ஆண்டும் இதை போல் விதிமுறைகளை பின்பற்றி கோவிலுக்குள்ளேயே பக்தர்கள் இன்றி தங்கத்தேரோட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.