• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

தாலிபான்கள் கைவசம் ஆப்கானிஸ்தான்… பின்வாங்கிய இந்தியா!…

By

Aug 17, 2021

ஆப்கானிஸ்தானுக்கான தூதர் அலுவலகம் மூடப்பட்டதை அடுத்து 120 தூதரக அதிகாரிகளுடன் 2வது விமானம் இந்தியா வந்தடைந்துள்ளது.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய செய்தியைக் கேள்விப்பட்டதுமே இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் சிறப்பு விமானங்களை அனுப்பி தம் நாட்டு மக்களையும், தூதர்களையும் மீட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வருவதற்கு யாராவது விரும்பினால் அவர்களுக்கு உடனடி மின்னணு விசா வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என இந்தியா அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் அங்கிருந்த தூதரகங்களை மூடிவிட்டன.

தூதரக ஊழியர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருகிறார்கள். இவர்களில் பலர் நாட்டை விட்டு சென்று விட்ட நிலையில் மற்றவர்கள் தங்களது நாட்டுக்கு செல்வதற்காக காபூல் விமான நிலையத்தில் காத்திருக்கிறார்கள்.இந் நிலையில் இந்தியாவும் தனது தூதரகத்தை மூடிவிட்டு ஊழியர்களை பத்திரமாக வெளியேற்ற ஏற்பாடு செய்தது. இந்திய தூதர் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவரும் காபூல் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு இருந்தனர்.

அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக விமானப்படையை சேர்ந்த சி-17 சிறப்பு விமானம் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை 120 தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் அந்த விமானத்தில் ஏறினார்கள். பின்னர் விமானம் டெல்லி நோக்கி புறப்பட்டது. இந்நிலையில் 120 அதிகாரிகளுடன் இந்திய விமானப்படை விமானம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் தரையிறங்கியது. ஏற்கனவே முதல் விமானத்தில் 129 இந்தியர்கள் தாயகம் திரும்பிய நிலையில் மேலும் 120 பேர் வந்துள்ளனர்.

இன்னும் ஏராளமான இந்தியர்கள் ஆப்கானிஸ்தானில் சிக்கி இருக்கிறார்கள். அவர்களை அழைத்து வருவதற்காக மீண்டும் விமானங்கள் அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன. தற்போது 420 இந்தியர்கள் அங்கு சிக்கி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் அனைவரும் பத்திரமாக அழைத்து வரப்பட இருக்கிறார்கள்.