காவல் தெய்வங்களில் கருப்பண்ணசாமி மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாக பக்தர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. அதிலும் மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் உள்ள 18ம் படி கருப்பண்ணசாமி கோயில் மிகவும் பிரபலமானது. பதினெட்டாம்படி கருப்பசாமி மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கும் மதுரை சுற்றுவட்டார மக்களுக்கும் காவல் தெய்வமாகவும் குல தெய்வமாகவும் இருந்து வருகிறார்.
கள்ளழகருக்கு காவல் புரியும் கருப்பணசாமியை மக்கள் தங்கள் குல தெய்வமாக கொண்டு வழிபட்டு வருகின்றனர். கருப்பசாமியிடம் முறையிட்டால் நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்பது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை. அப்படி தங்களது நேர்த்திக்கடனை தீர்த்து வைக்கும் கருப்பண்ணசாமிக்கு அரிவாளை காணிக்கையாக செலுத்துவதை பக்தர்கள் ஐதீகமாக கொண்டுள்ளனர்.
அப்படித்தான் திருப்புவனத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் 200 கிலோ எடை, 18 அடி நீள மெகா அரிவாளை நேர்த்திக்கடனாக வழங்கியுள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் அரிவாள் தயாரிக்கப்பட்டது. போலீசார் கெடுபிடி காரணமாக, திருப்பாச்சேத்தியில் வீச்சரிவாள் தயாரிக்கப்படுவது முற்றிலும் தடை செய்யப்பட்டது.
தற்போது விறகு வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு அடி நீள அரிவாள் மட்டும் தயாரிக்கப்படுகிறது. மேலும் ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் கோயில்களில் நேர்த்திக்கடனுக்காக செலுத்தப்படும் அரிவாள் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. திருப்புவனத்தில் தற்போது 12 அரிவாள் பட்டறைகள் செயல்படுகின்றன.