அரசு பேருந்துகளில் தற்போது திருக்குறள் இடம்பெற்றுள்ளன. திமுக ஆட்சி என்பதால் வள்ளுவ பெருந்தகையின் குறள் வெண்பாவிற்கு கலைஞரின் பொருளுரையுடன் கூடிய தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. கலைஞர் முத்தமிழ் வித்தகர் என்பதால் அவரது பொருளுரையை யாரும் குறை சொல்ல முடியாது. ஆனால் திருக்குறளை தவறுதலாக பிழையோடு கன்னாபின்னா என்று எழுதுவதை தமிழ் ஆர்வலர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்ற குறள்
பிறப்புஒக்கும் எல்லாஉயிர்க்கும் சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்று பொறிக்கப்பட்டுள்ளது.
அதே போல தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் என்ற குறள்.
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் என பொறிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒவ்வொரு குறளும் ஜிலேபியை குரங்கு பிய்த்து போடுவது போல திருக்குறளுக்கு கத்திரி போட்டுள்ளார்கள்.
பாஜகவினர் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த போது வந்த கோபம் திருக்குறளை சிதைக்கும் போது ஏன் வரவில்லை என்று நாம் கேட்கிறோம்.
மேலும் இந்த குறளுக்கு உண்மையான பொருளடக்கத்தை இதுவரை யாரும் கொடுக்க முடியவில்லை. அனைவரும் சுற்றி வளைத்து காதை தொடுவது போல பொருளுரை வழங்கியிருக்கிறார்கள். கடவுளால் கூட முடியாத காரியம் ஒன்று உண்டென்றால் முயற்சி செய்தால் அடைய முடியும் என்பது தான் அதன் உண்மையான பொருளாக இருக்க முடியும். ஆனால் ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயின் முயற்சி தன் உடம்பு வருத்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும் என்கிறார் மு.வரதராசனார். இதே போல தான் கலைஞரும் தேவநேயபாவாணார் ஆகியோர்களது பொருளுரையும் உண்மையை உரைக்கவில்லை. நம் தாத்தா வள்ளுவனுக்கு இருக்கிற தைரியம் இங்கு யாருக்கும் இல்லை. வள்ளுவனுக்கு நிகர் வள்ளுவன் தான்