ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் தண்ணீர் திறக்கப்பட்டது. பெரிய மதகுகள் வழியாக திறக்கப்பட்ட தண்ணீருக்கு நான்கு மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் மூன்று அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒரு போக பாசனப் பரப்பாகிய 85,563 ஏக்கர் நிலங்களுக்கும் மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசனப் பகுதியான 19,439 ஏக்கர் நிலங்களுக்கும்.
ஆக மொத்தம் 1,05,002 ஏக்கர் நிலங்களுக்கு வைகை அணையிலிருந்து விநாடிக்கு 1130 கன அடி விதம் இன்று முதல் 120 – நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் , மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர் , திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் , மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது .
இந்நிகழ்வில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி , முன்னால் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், மூக்கையா,பெரியாறு வைகை வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் சுகுமாறன் , பவளக்கண்ணன் மற்றும் பெரியாறு பிரதான கோட்ட செயற்பொறியாளர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.