கொலை முயற்சி வழக்கு தொடர்பாக தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆஜராக வந்தார். இதையொட்டி நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் திமுக நகர செயலாளர் சுரேஷ் கொலை முயற்சி வழக்கில் 4வது குற்றவாளியாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சேர்க்கப்பட்டார். தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்று (11ம் தேதி) இறுதி விசாரணைக்காக சம்பந்தப்பட்ட அனைவரும் ஆஜாராகும்படி தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி இன்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆஜரானார். இவ்வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக பிரமுகர் ராதாகிருஷ்ணன் என்பவரும் ஆஜரானார். அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சி நபர்களும் ஓரே வழக்கிற்காக ஆஜராக உள்ளதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையொட்டி நீதிமன்ற வளாகத்தில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏடிஎஸ்பி கோபி, டவுண் டிஎஸ்பி கணேஷ், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றத்திற்கு வரும் மக்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.