சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் தனித்துவமான இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் யுவபுரஸ்கார் விருதுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
24 மொழிகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழ் மொழி பிரிவில் 2021-ம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருதை எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்பிரமணியன் பெற உள்ளார். இவர் எழுதிய நட்சத்திரவாசிகள் என்ற நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட உள்ளது. விருதுக்கான பதக்கமும் ரூ.50,000 பரிசுத் தொகையும் சாகித்ய அகாடமி சார்பில் வழங்கப்படும்.
ராஜபாளையத்தை சேர்ந்த இவர், சென்னையில் மென்பொறியியல் துறையில் பணியாற்றி வருகிறார். இவரது நாவலின் களமும் ஐ.டி துறையைச் சார்ந்ததே. இது இவரின் முதல் நாவல். இதற்கு முன்’ டொரினோ’ என்கிற சிறுகதை தொகுப்பு வெளியாகி இருந்தது. இணைய இதழ்களில் தொடர்ச்சியாக கதைகள் எழுதி வரும் கார்த்திக், ‘ஒளிரும் பச்சை கண்கள்’ என்கிற சிறுகதை தொகுப்பையும் வெளியிட்டு உள்ளார்.